Saturday, April 15, 2017

Vinayakar Kavacham - விநாயகர் கவசம்

 
விநாயகர் கவசம்

வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு
விநாயகர் காக்க, வாய்ந்த சென்னி
அளவுபடா அதிக சவுந்தர தேக
மகோற்கடர்தாம் அமர்ந்து காக்க
விளரற நெற்றியை என்றும் விளங்கிய
காசிபர் காக்க, புருவம் தம்மைத்
தளர்வில் மகோதரர் காக்க
தடவிழிகள் பாலசந்திரனார் காக்க       (1)

கவின் வளரும் அதரம் கஜமுகர்
காக்க, தாலம் கணக்கிரீடர் காக்க
நவில் சிபுகம் கிரிசை சுதர் காக்க
நனி வாக்கை விநாயகர்தாம் காக்க
அவிர் நகை துன்முகர் காக்க்
வளரெழில் செஞ்செவி பாசபாணி காக்க
தவிர்தலுறாது இளங்கொடிபோல் வளர்மணி
நாசியைச் சிந்திதார்த்தர் காக்க           (2)

காமுரு பூமுகம் தன்னைக் குணேசர்
நனி காக்க, களம் கணேசர் காக்க
வாமமுறும் இருதோளும் வயங்கு
கந்த பூர்வஜர்தாம் மகிழ்ந்து காக்க
ஏமமுறு மணிமுலை விக்கினவிநாசர்
காக்க, இதயம் தன்னைத்
தோமகலும் கணநாதர் காக்க, அகட்டினைக்
துலங்கு ஏரம்பர் காக்க                  (3)

பக்கம் இரண்டையும் தராதரர் காக்க
பிருட்டத்தைப் பாவம் நீக்கும்
விக்கினகரர் காக்க, விளங்கி லிங்கம்
வியாளபூடணர்தாம் காக்க
தக்க குய்யம் தன்னை வக்கிரதுண்டர்
காக்க, சகனத்தை அல்லல்
உக்க கணபர் காக்க, ஊருவை
மங்கள மூர்த்தி உவந்து காக்க               (4)

தாழ் முழந்தாள் மகாபுத்தி காக்க
இருபதம் ஏகதந்தர் காக்க
வாழ்கரம் க்ஷிப்ரப்ரசாதனர் காக்க
முன் கையை வணங்குவார் நோய்
ஆழ்தரச் செய் ஆசாபூரகர் காக்க
விரல் பதும அத்தர் காக்க
கேழ் கிளரும் நகங்கள் விநாயகர் காக்க
கிழக்கினில் புத்தீசர்  காக்க                  (5)

அக்கினியில் சித்தீசர் காக்க
உமாபுத்திரர் தென்றிசை காக்க
மிக்க நிருதியில் கணேசுரர் காக்க
விக்கின வர்த்தனர் மேற்கென்னும்
திக்கதனில் காக்க, வாயுவில்
கஜகன்னர் காக்க, திகழ் உதீசி
தக்க நிதிபர் காக்க
வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க            (6)

ஏகதந்தர் பகல் முழுதும் காக்க
இரவினும் சந்தி இரண்டன் மாட்டும்
ஒகையில் விக்கினகிருது காக்க
இராக்கதர் பூதம் உறு வேதாளம்
மோகினிப் பேய் இவையாதி உயிர்த்திறத்தால்
வரும் துயரும் முடிவிலாத
வேகமுறு பிணிபலவும் விலக்குபு
பாசாங்குர்தாம் விரைந்து காக்க                (7)

மதி, ஞானம், தவம், தானம், மானம், மொழி
புகழ், குலம், வண்சரீரம், முற்றும்
பதிவான தனம், தானியம், கிருஹம்,
மனைவி, மைந்தர் பயில் நட்பாதி
கதி யாவும் கலந்து சர்வாயுதர் காக்க
காமர் பவுத்திரர் முன்னான
விதியாரும் சுற்றமெல்லாம் மயூரேசர்
எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க                 (8)

வென்றி ஜீவிதம் கபிலர் காக்க
கரியாதி எனாம் விகடர் காக்க
என்று இவ்வாறு இதுதனை முக்காலமும்
ஒதிடின் நும்பால் இடையூறு ஒன்றும்
ஒன்றுறா ! முனிவராகாள் அறிமின்கள் !!
யாரொருவர் ஓதி னாலும்
மன்ற ஆங்கு அவர் தேகம் பிணியற
வச்சிர தேகம் ஆகி மின்னும்                           (9)

இங்கு குறிப்பிடப் பெறும் விநாயகர் பெருமானின் பெயர்கள்
1. விநாயகர் - தனக்கு மேல் ஒரு தலைவர் இல்லாதவர்.
2. மகோற்கடர் - பெருவயிறு படைத்தவர்
3. காசிபர் - கச்யப முனிவர்க்கு மைந்தராக ஒருகால் அவதாரம் செய்தவர்
4. மகோதரர் - பெருவயிற்றோன்
5. பாலசந்திரனார் - நெற்றியின் உச்சியில் சந்திரனைத் தரித்தவர் (முன் தலை நெற்றியின் உச்சிப்பகுதி, வகிடு)
6. கஜமுகர் - யானை முகத்தோன்
7. கணக்கிரீடர் - (அகராதி - க்ஷகாராந்த) எழுத்துக்களோடு விளையாடுபவர்
8. கிரிசைசுதர் - பார்வதி புத்ரர் (கிரிசை - கிரிஜா, மலைமகள், பார்வது, சுதர் -    மைந்தர்)
9. துன்முகர் - தீயோரால் காண இயலாதவர்.
10. பாசபாணி - பாசக் கயிற்றைக் கையில் கொண்டவர்
11. சிந்திதார்த்தர் - நினைத்தப் பொருளை அளிப்பவர்
12. குணேசர் - குணங்களுக்கு ஈசன்
13. கணேசர் - பக்த கணங்களுக்கு ஈசன்
14. கந்த பூர்வஜர் - கந்தனுக்கு முன் பிறந்தவர்
15. விக்கின விநாசர் - தடைகளை அகற்றுபவர்
16. கணநாதர் - ஸாரூப கணங்களுக்குத் தலைவர் (இறை வழிபாட்டினால் ஆன்மாக்கள் அடையக்கூடிய நான்கு நிலைகளான, ஸாலோக்ய பதவி (இறைவரது உலகில் இடம் பெற்று வாழ்தல்), ஸாமீப்ய பதவி (இறைவரது அருகில் இடம் பெற்று வாழ்தல்), ஸாரூப்ய நிலை (இறைவரைப் போன்றே உருவம் பெற்று வாழ்தல்), ஸாயுஜ்ய பதவி (இறைவரோடு இரண்டறக் கலந்து முக்தியடைதல்).)
17. ஏரம்பர் - ஹேரம்பர், பராக்ரமசாலி
18. தராதரர் - பூமியைத் தாங்கி நிற்பவர் (தரா- பூமி)
19. விக்கினகரர் - விக்கினஹரர், தடைகளைப் போக்குபவர்.
20. வியாளபூடணர் - பாம்பை ஆபரணமாகக் கொண்டவர் (வியாளம் - அரவம், பாம்பு)
21. வக்கிரதுண்டர் - வளைந்த துதிக்கை கொண்டவர்.
22. கணபர் - கணப, கணபதி, பக்த கணங்களுக்குத் தலைவர்
23. மங்கள மூர்த்தி - மங்கள உருவினர்
24. மகாபுத்தி - சிறந்த அறிவுடையவர்
25. ஏகதந்தர் - ஒற்றைக் கொம்பர்
26. க்ஷிப்ரப்ரசாதனர் - உடனே அருள் புரிபவர்
27. ஆசாபூரகர் - ஆசைகளைப் பூர்த்தி செய்ப்வர்
28. பதும அந்தர் - தாமரை மலர்க்கையினர்
29. புத்தீசர் - (சித்தி) புத்திக்கு ஈசனார்
30. சித்தீசர் - சித்திக்கு ஈசனார்
31. உமாபுத்திரர் - உமை மைந்தர்
32. கணேசுரர் - யுத்த கணங்களுக்கு ஈசுவரர்
33. விக்கினவர்த்தனர் - (தன்னை மறந்தோர் வாழ்வில்) தடைகளை அதிகரிப்பவர்
34. கஜகன்னர் - கஜகர்ணகர், யானைக் காதுடையவர்.
35. தக்க நிதிபர்  - சிவனின் செல்வர் (தக்கன் - சிவபிரான்)
36. ஈசநந்தனர் - ஈசனின் மைந்தர்
37. விக்கினகிருது - (தன்னைப் போற்றாதாரின் செயல்கட்குத்) தடைகளை உண்டாக்குபவர்
38. பாசாங்குசர் - பாசத்தையும் அங்குசத்தையும் தரித்தவர்
39. சர்வாயுதர் - அனைத்து ஆயுதங்களையும் உடையவர்.
40. மயூரேசர் - மயிலுக்கு ஈசன், மயிலேறி அருள வரும் இறைவர்.
41. கபிலர் - சிவந்த பழுப்பு நிறம் அல்லது சாம்பல் நிறத்தில் தோன்றுபவர்
42. விகடர் - வேடிக்கையாக நின்று அருளுபவர், அச்சம் தரும் தோற்றம் கொள்ளக்கூடியவர், பரந்த (பெரிய)
திருமேனி கொண்டவர், பெருமிதமானவர், அழகானவர், மாறுபட்ட தோற்றம் கொண்டவர், எதனாலும் மறைக்கப்படாதவர்.

No comments:

Post a Comment