Showing posts with label Parivarthini Ekadashi. Show all posts
Showing posts with label Parivarthini Ekadashi. Show all posts

Monday, September 16, 2013

Ekadashi Vrat Katha – Parshwa (Vamana) Ekadashi - ஏகாதசி விரத கதை - பார்ஷ்வா - வாமன ஏகாதசி

 Parivarthini Ekadhasi – Sri Vishnu turns his side in his 
Yoga nidhra period
ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே,
ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே.

பார்ஷ்வா - வாமன ஏகாதசி.
(பாத்ரபத மாதம் - சுக்ல பட்ச ஏகாதசி)
செப்டெம்பர் மாதம் 15 / 16 ம் தேதி, திங்கட்கிழமை, பாத்ரபத மாதம், சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை பார்ஷ்வா - வாமன ஏகாதசியாக கொண்டாடுவர். பார்ஷ்வா - வாமன ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம்.

ஸ்ரீ யுதிஷ்டிரர் கிருஷ்ண பரமாத்மாவிடம் - "ஹே ! வாசுதேவா, பாத்ரபத (புரட்டாசி) மாதம் (ஆகஸ்ட் - செப்டெம்பர் (ரிஷிகேச மாதம்)) சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயரையும், அன்று வழிபட வேண்டிய கடவுளர் யார்,  அந்நாளன்று விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள், இவற்றைப் பற்றி விரிவாக எடுத்துரையுங்கள்" என்று வேண்டி நின்றார்.  ஸ்ரீ கிருஷ்ணரும் தர்மபுத்திரரின் வேண்டுகோளுக்கு இணங்கி பதிலளிக்கையில், " யுதிஷ்டிரா, பாத்ரபத மாதம் சுக்ல பட்ச ஏகாதசி நாள் பார்ஷ்வா - வாமன ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் பூரணமாக விரதத்தை கடைப்பிடிப்பவர் பெரும் புண்ணியத்தை அடைவதோடு, இறுதியில் மோட்சப்பிராப்தியும் பெறுவர். ஒருவரது பாவங்கள் அனைத்தையும் நீக்கி உயர்வு அளிப்பதால், இதை ஜெயந்தி ஏகாதசி என்றும் அழைப்பர். இந்த ஏகாதசியின் மஹிமையை சிரத்தையுடன் கேட்பவருக்கும் அவரது பாவங்களிலிருந்து விமோசனம் அளிக்கும் மகத்தான நாளிது. இந்நாளில் உபவாசத்துடன் விரதம் அனுஷ்டிப்பவர் அஸ்வமேத யாகம் செய்ததற்கு இணையான புண்ணியத்தை பெறுவர்.  மோட்சப்பிராப்தியை எளிதில் அடைவதற்கு மார்க்கத்தை அருளும் இந்நாளுக்கு இணையாக வேறு எந்த ஏகாதசி நாளும் இல்லை. ஆகவே இன்னல் நிறைந்த இவ்வுலக வாழ்க்கை சக்கரத்திலிருந்து விடுதலை பெற விரும்புவோர், வாமன ஏகாதசி அன்று உபவாசத்துடன் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அன்று விரத வழிமுறைகளின் படி விரதத்தை கடைப்பிடிப்பவர், தாமரை இதழ்களை ஒத்த கண்களுடன், மூன்று அடிக்கும் குறைவாக சிறு (குள்ள) ரூபத்தில் பகவான் மஹாவிஷ்ணு,  வாமனராக அவதாரம் எடுத்த வடிவில் வழிபட வேண்டும்.  வாமன அவதார ரூபத்தில் மகாவிஷ்ணுவை வழிபடுபவர் பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் அனைத்து தெய்வங்களையும் ஒரு சேர வழிபட்ட புண்ணியத்தை பெறுவதோடு, இவ்வுலக வாழ்க்கைக்குப் பின் ஸ்ரீ ஹரியின் இருப்பிடமான வைகுண்டப்பிராப்தியையும் பெறுவர். விரதங்களில் மேன்மையானது ஏகாதசி விரதம். அந்த ஏகாதசி நாட்களில் மிகவும் மேன்மையானது வாமன ஏகாதசி நாள். மூன்று லோகங்களிலும் இதற்கு இணையான நாள் கிடையாது " - என்று அருளினார். 

நித்திரையில் ஆழ்ந்திருக்கும் மஹாவிஷ்ணு தன்னுடைய சயன கோலத்தை மாற்றும் நாள் ஆதலால் வாமன ஏகாதசி மிகவும்  சுபமங்கள நாளாக முக்கியத்துவம் பெறுவதுடன், பரிவர்த்தனி ஏகாதசி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. மஹாராஜா யுதிஷ்டிரர் ஸ்ரீகிருஷ்ணரிடம் - " ஜனார்த்தனா,  மூலப் பரம்பொருளான மஹாவிஷ்ணு நித்திரையில் ஆழ்ந்திருப்பது எப்படி? அக்கணம் நித்திரையில் ஆழ்ந்திருக்கும் போது, சயன கோலத்தை மாற்றுவது எப்படி?  மஹாவிஷ்ணு நித்திரையில் ஆழ்ந்திருக்கும் போது இவ்வுலக ஜீவராசிகளுக்கு என்ன நேர்கிறது..அவர்களின் நிலை என்ன? தாங்கள் அசுரர்களின் தலைவனான மஹாபலி சக்ரவர்த்தியை அடக்கியது எப்படி..? பிராமணர்களை மகிழ்வித்து அவர்களின் ஆசீர்வாதத்தை எப்படி பெறுவது..? தாங்கள் பவிஷ்ய புராணத்தில் உரைத்துள்ள சாதுர்மாஸ்ய விரதத்தை எப்படி கடைப்பிடிப்பது..?  தாங்கள் என் மீது கருணை கொண்டு என்னுடைய சந்தேகங்களுக்கு பதில் அளிக்க வேண்டும் "என்று வேண்டினார். 

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அதற்கு பதிலளிக்கையில்-" அரசர்களில் சிங்கம் போன்றவனே, உனக்கு ஒரு வரலாற்று நிகழ்வை சொல்வது, எனக்கு மிகவும் மகிழ்வை அளிக்கிறது. இந்நிகழ்வானது, கேட்பவர்களின் பாவங்கள் அனைத்தையும் போக்கும் மஹிமை வாய்ந்தது. திரேதாயுகத்தில், பலி என்னும் பெயர் கொண்ட அரசன் இருந்தான். அசுர குலத்தில் பிறந்திருந்தாலும், என் மீது மிகவும் பக்தி பூண்டிருந்தான். என்னை மகிழ்விக்க வேதம் ஓதுதல், ஹோமம் என அனைத்தையும் விடாமல் நடத்தி வந்தான். இருமுறை பிறப்பு எடுக்கும் பிராமணர்களை மதித்து தினசரி ஹோம காரியங்களில் ஈடுபட்டு வந்தான். அத்தகைய புண்ணிய ஆத்மாவானவன், ஒரு முறை இந்திரனுடன் சண்டையிட நேர்ந்தது. அச்சண்டையின் இறுதியில் இந்திரனை தோற்கடித்து என்னால் இந்திரனுக்கு அளிக்கப்பட்ட இந்திரலோகம் முழுவதையும் எடுத்துக் கொண்டான். ஆதலால் இந்திரனும் மற்ற தேவர்களும், ரிஷி, முனிவர்கள் சூழ என்னிடம் வந்து,பலிச் சக்ரவர்த்தியைப் பற்றி முறையிட்டனர். சிரம் நிலம் தொட, தேவ குரு பிரகஸ்பதி வழிகாட்ட, வேத ஸ்தோத்ரங்களை துதித்தபடி வழிபட்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று நான் என் ஐந்தாவது அவதாரமாக, வாமன அவதாரம் எடுத்து அவர்கள் சார்பாக பலியிடம் செல்லுவதாகக் கூறினேன்" என்றார் ஸ்ரீகிருஷ்ணர்.    

யுதிஷ்டிரர் கண்ணனிடம் - " பிரபு, மகத்தான ஆற்றல் பெற்ற அசுரகுலத் தோன்றலான அரசன் பலியை வாமனனாக (சிறு குள்ள வடிவில்) அவதரித்து தாங்கள் எப்படி வெற்றி பெற்றீர்கள் என்பதை விரிவாக தங்கள் பக்தனுக்கு எடுத்துரைக்க வேண்டும்" என்று வேண்டினார். ஸ்ரீகிருஷ்ணர் அதற்கு பதிலளிக்கையில், "நான் வாமனனாக அவதரித்து இருந்தாலும், பிராமணனாக பக்திமான் அரசன் பலியிடம் சென்று எனக்கு நிலம் தானம் அளிக்குமாறு வேண்டினேன். நான் வாமனன் ஆதலால் எனக்கு மூன்று அடி நிலமே மூவுலகங்களுக்கும் சமமானது. அரசன் பலியும் காலம் தாழ்த்தாது என் வேண்டுகோளை ஏற்று மூன்று அடி நிலம் தானம் அளிக்க சம்மதித்தான். பலி வாக்களித்தவுடன், நான் விஸ்வரூபம் எடுத்தேன். என்  பாதம் புவியையும், தொடை பூவர்லோகத்தையும்,  இடுப்பு ஸ்வர்க்க லோகத்தையும், வயிறு மஹர்லோகத்தையும், மார்பு ஜனலோகத்தையும், கழுத்து தபோலோகத்தையும், தலை சத்யலோகத்தையும், முகம் மற்ற அனைத்து படைப்புகளையும் அளந்து நிறைவு செய்தது. அனைத்து கிரகங்களும், சந்திரன், சூரியன் உட்பட என் விஸ்வரூபத்தில் அடங்கினர். 

இந்த விஸ்வரூப விளையாட்டினை கண்டு இந்திரன், ஆதிசேஷன் மற்றும் அனைத்து தேவர்களும் வேத மந்திர துதிகளால் பிரார்த்தனை செய்தனர். பின்னர் அரசன் பலியை என் கைகளில் ஏந்தி, -"குற்றமற்றவனே, பூவுலகம் முழுவதும் என் ஒரு பாதத்தின் கீழும், மேலுலகம் முழுவதும் மற்றொரு பாதத்தினாலும் அளக்கப்பட்டது. வாக்களித்தபடி மூன்றாவது அடி நிலத்திற்காக நான் என் பாதத்தை எங்கு வைப்பது என்று கேட்டேன். இதைக் கேட்டவுடன், அரசன் பலி மிகவும் பணிவுடன் தலை வணங்கி குனிந்து, மூன்றாவது அடியை வைக்க தன் சிரசினை அளித்தான். ஒ யுதிஷ்டிரா, என் பாதத்தை பலியின் சிரசின் மீது வைத்து பலியை பாதாள லோகத்திற்கு அனுப்பி வைத்தேன். பலியின் அடக்கத்தையும், பணிவையும் கண்டு நான் மிகவும் மகிழ்ந்து பலியின் இருப்பிடத்தில் நிரந்தரமாக வசிப்பேன் என்று வரம் அளித்தேன். பின்னர், பரிவர்த்தனீ ஏகாதசி அன்று, பக்த பிரகலாதனின் பேரனான, விரோசனின் மைந்தனான பலி, என்னுடைய பிரதிமையை தன் இருப்பிடத்தில் பிரதிஷ்டை செய்தான். ஓ யுதிஷ்டிரா, ஹரிபோதினி ஏகாதசி வரை, அதாவது கார்த்திகை மாத சுக்ல பட்ச ஏகாதசி வரை, நான் வைகுண்டத்தில் நித்திரையில் ஆழ்ந்திருப்பேன். இக்காலம் சாதுர்மாஸ்யம் என அழைக்கப்படும். இக்காலத்தில் செய்யப்படும் தான, தர்மங்கள், பூஜை, வழிபாடுகள் மிகுந்த புண்ணியத்தை வழங்கும் சக்தி பெற்றது.

ஆகவே பரிவர்த்தினீ ஏகாதசி மிகவும் கவனத்துடன் அனுஷ்டிக்க வேண்டும். இந்த ஏகாதசி உபவாச விரதம் மேற்கொள்பவர் பாவங்கள் நீங்கப்பெற்று பரிசுத்தம் பெறுவர். விரத நாளன்று, பக்தர்கள் பிரபு திரிவிக்ரமர், வாமன தேவரின் வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். இந்நாள் நித்திரையில் ஆழ்ந்திருக்கும் மஹாவிஷ்ணு சயன கோலத்தை மாற்றும் நாளாகும். முடிந்தவரை. தயிர் கலந்த சாதம் மற்றும் சிறு அளவு வெள்ளியை வேத அத்யயனம் செய்யும் பண்டிதர்களுக்கு தானம் அளிப்பது மிகுந்த புண்ணியத்தை அளிக்கும். தானம் அளிப்பதுடன் அன்று இரவு விழித்திருந்து பகவத் புராணம், கீர்த்தனை என்று பகவானின் நாம பாராயணம் செய்ய வேண்டும். எளிதில் கடைப்பிடிக்கக் கூடிய இந்த வழிமுறை உலகாயத‌த்திலிருந்து விடுதலை பெறும் மார்க்கத்தை வழங்கக் கூடியது.   விதி வழிமுறைகளின்படி இந்த பரிவர்த்தனீ ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பவர் இவ்வுலகில் இகபர சுகங்களுடன் வாழ்வதுடன், முடிவில் வைகுண்டப் பிராப்தியும் அடைவர். இவ் ஏகாதசி விரத மஹாத்மியத்தை பக்தி சிரத்தையுடன் கேட்பவர், முடிவில் தேவலோகத்தை அடைந்து சந்திரனைப் போன்று ஒளியுடன் வாழ்வர். இவ் ஏகாதசி விரதம் மேற்கொள்ளுவது ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்வதற்கு ஒப்பானதாகும்" என்றருளினார்.. 

ப்ரம்ம வைவர்த்த புராணம், பாத்ரபத மாதம், சுக்ல பட்ச ஏகாதசி அதாவது பார்ஷ்வா - வாமன ஏகாதசி என்று அழைக்கப்படும் ஏகாதசியின் மஹிமையை விவரிக்கும் படலம் முடிவுற்றது.


குறிப்பு: பரிவர்த்தினீ ஏகாதசிக்கு அடுத்த நாள் ஸ்ரீ வாமன துவாதசி நாளாகும். பிரபு ஸ்ரீவாமனர் அவதரித்த நாளாக கொண்டாடப்படுகிறது. ஏகாதசி உபவாசத்தை துவாதசி அன்று மதியம் ஏகாதசி பிரசாதத்துடன் முடிக்க வேண்டும்.

ஓம் நமோ பகவதோ வாசுதேவாய….வாசுதேவாய நமோ நம:


தொடர்புடைய ஏகாதசி பதிவுகள்
ஏகாதசி விரத கதை -  அஜா - அன்னதா ஏகாதசி  - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  பவித்ரோபன (புத்ரதா) ஏகாதசி  - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  காமிகா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - தேவசயனி (பத்ம) ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - யோகினி
  ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - நிர்ஜலா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
அஸ்வமேத யாக பலன் தரும் ஏகாதசி விரதம் பகுதி 1 - காண இங்கு சொடுக்கவும்.
கிரகங்களும் ஏகாதசியும், ஏகாதசி விரதம் பகுதி 2 - காண இங்கு சொடுக்கவும்.
குருவாயூரும் ஏகாதசியும், திருப்பதியும் ஏகாதசியும்,
 ஏகாதசியும் சங்கர நாராயணரும் ஏகாதசி நிறைவு பகுதி- காண இங்கு சொடுக்கவும்.