Sunday, May 12, 2013

Sri Vaibhava Lakshmi Vrat Katha - ஸ்ரீ வைபவ லக்ஷ்மீ வ்ரத பூஜா வரலாறு.

 
Courtesy - Google Images
சகல ஐஸ்வர்யங்களும் தரும் வைபவலக்ஷ்மீ பூஜை பதிவின் தொடர்ச்சி இது. முதல் பகுதியை காண இங்கு சொடுக்கவும். 
 
ஸ்ரீ வைபவ லக்ஷ்மீ பூஜை மஹிமை - கதை
ஸ்ரீ வைபவ லக்ஷ்மீ வ்ரத பூஜையினால், பலவிதமான நன்மைகள் ஏற்பட்டுள்ளன. நன்மையடைந்தவர்கள் ஏராளம்

1. பெண்ணிற்குத் திருமணம்
பெண்ணிற்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு பணம் இல்லாமல் வருந்திய தாய் தெருவில் சென்று கொண்டிருந்த சமயம் அருகிலிருந்து சென்ற ஒரு ஸ்கூட்டரிலிருந்து ஒரு புத்தகம் கீழே விழுந்தது. அதை எடுத்துப் பார்த்தாள். அது ஸ்ரீ வைபவ லக்ஷ்மீ வ்ரத பூஜை புத்தகமாக இருந்தது. மறுநாள் வெள்ளிக்கிழமை அதில் கூறியபடி நம்பிக்கையுடன் பக்தியாக பூஜை செய்து வந்தாள். நான்கு வெள்ளிக்கிழமை முடிந்ததும் மஹாராஷ்டிரா லாட்டரியில் ரூபாய் 30,000 கிடைத்தது. பெண்ணின் திருமணம் நன்றாக நடந்தது.


2. வியாபாரம் வளமை பெற்றது
சுரேஷ் நன்றாக வியாபாரம் செய்து லாபமடைந்து சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தான். எதிர்பாராத விதமாக லாபம் குறைந்து வியாபாரம் நலிய ஆரம்பித்தது. அவன் மனைவி சரளா மிகவும் மனோ தைரியத்துடன் ஒரு வருடம் சமாளித்து வந்தாள். அச்சமயம் சரளாவின் மாமி வீட்டிற்கு வந்தாள். சரளா மாமியிடம் தன் மனக்குறைகளைக் கூறினாள். மாமி, "ஸ்ரீ வைபவ லக்ஷ்மீ வ்ரத பூஜையை செய்தால் உன் துன்பங்கள் தூர விலகும்." என்றாள். சரளா உடன் கடைக்குச் சென்று ஸ்ரீ வைபவ லக்ஷ்மீ புத்தகம், அஷ்டலக்ஷ்மீ படம், ஸ்ரீ வைபவ லக்ஷ்மீ யந்திரம் முதலிய தேவையான பொருட்களை வாங்கி வந்து வெள்ளிக்கிழமை பூஜையைத் தொடங்கினாள். அன்று மாலையே சுரேஷ் கம்பெனியிலிருந்து மிக சந்தோஷமாக வீடு திரும்பினான்.

காரணம்.! ஒரு பெரிய வியாபாரத் தொடர்பு ஏற்பட்டு ஒப்பந்தமாகியது. தன் மனைவியிடம் கூறினான். அவளும் மகிழ்ச்சியடைந்து தொடர்ந்து 21 வெள்ளிக்கிழமை பூஜை செய்து பூஜை முடிக்கும் நாளன்று 101 ஸ்ரீ வைபவலக்ஷ்மீ புத்தகங்களை வாங்கி எல்லோருக்கும் கொடுத்து ப்ரஸாதமும் வழங்கினாள். சுரேஷ் சரளா குடும்பத்தில் அதற்கு பிறகு துக்கத்தையும், துன்பத்தையும் தேட வேண்டியதாயிற்று. அன்னையின் அருள் இருக்க மற்ற அரக்கர்கள் அருகே வருவார்களா?

இப்படி கல்வி செல்வம் மனநிம்மதி அடைய முடியாமல் வரும் எந்த துக்கத்தையும் போக்கடிப்பதற்கு (அன்னை ஸ்ரீ வைபவ லக்ஷ்மீயின் அருளைப் பெற்று ) ஸ்ரீ வைபவ லக்ஷ்மீ வ்ரத பூஜையைச் செய்து வளம் பெறலாம்.

ஜய ஜய வைபவ லக்ஷ்மீ...................ஜய ஜய வைபவ லக்ஷ்மீ


ஸ்ரீ வைபவ லக்ஷ்மீ வ்ரத பூஜா வரலாறு.
வட இந்தியாவில் ஒரு பெரிய நகரத்தில் கோடிக்கணக்கான மக்கள் வசித்து வந்தனர். அங்கு நல்லவர் பலர் இருந்தனர். அவர்கள் சத்தியத்தைக் கடைபிடித்து தெய்வபக்தியுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வந்தனர். அவர்களுள் அபூர்வ தம்பதிகள் ஷீலாவும் அவரது கணவரும்.

ஷீலா குடும்பத்தினர் நல்ல குணவான்கள். உழைப்பை உயர்வாகக் கருதி செயல்படுபவர்கள். பக்தியுடையவர்கள். கடவுள் நம்பிக்கை மிகவும் அதிகம். குறிப்பாக மகாலக்ஷ்மீயிடம் மிகுந்த பக்தியுடையவர்கள். வீட்டில் பூஜை, பஜனை முதலியவைகளைச் செய்வதோடு அன்னை மகாலக்ஷ்மீயின் கோவிலில் பூஜை, பஜனை முதலியவற்றை செய்தும், கலந்து கொண்டும் இருந்தனர்.

அவரது வீட்டில் செல்வம் குவிந்து கிடந்தது. துன்பத்தையே அறியாது மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்தினர். ஷீலாவின் கணவர் நல்ல முதலாளியாகவும், வியாபாரியாகவும் இருந்தார். இவர்கள் குடும்பத்தை அந்நகரில் உள்ளவர்கள் ஒரு லக்ஷிய குடும்பமாகக் கருதி மிக்க மதிப்பும் மரியாதையுடனும் பழகி வந்தனர்.


அக்குடும்பத்தில் திடீரென்று மாற்றம் காணப்பட்டது. கண் திருஷ்டி பட்டது போல் ஆனது. விதி வேறு விதமாக விளையாடத் தொடங்கியது. ஷீலாவின் கணவர் தன் குணத்திலிருந்து நழுவினார். தீயவர்களுடன் பழக்கம் ஏற்பட்டு மது அருந்துதல், சூது விளையாடுதல், குதிரைப் பந்தயம் விளையாடுதல் ஆகிய தீய செயல்களில் இறங்கினார். இதன் விளைவு? செல்வம் குறைந்தது. மகிழ்ச்சி குறைந்தது. அன்னை மகாலக்ஷ்மீயின் கருணையில்லையோ என்று நினைக்குமளவு தரித்திரம் என்ற அரக்கன் விளையாட வறுமை என்ற இருள் சூழ ஆரம்பித்தன. மகிழ்ச்சி மறைந்தது. ஷீலா மிகவும் துக்க கடலில் மூழ்கினாள்.


மிக்க வருத்தமான இந்த சூழ்நிலையில் ஷீலா தன் கணவனை எப்படி திருத்துவது என்று யோசனை செய்தாள். அவன் திருந்துவதாக இல்லை. இவளுடைய எந்தவித அறிவுரைகளையும் அவன் காதில் போட்டுக் கொள்ளாமல் கிடைத்த பணத்தை விரயம் செய்து கொண்டே இருந்தான். 

ஆனால் ஷீலா மனம் தளராமல் இப்படிப்பட்ட ஏழ்மை நிலை நிச்சயம் மாறுபடும் என்று தன்னம்பிக்கைக் கொண்டிருந்தாள். அன்னை மஹாலக்ஷ்மீ கோவிலுக்கு போவதற்கு அவளால் இயலவில்லை. ஏனென்றால் மனதில் உள்ள துக்கத்துடன் அங்கு சென்று பக்தியில்லாமல் பஜனை செய்ய வேண்டி வருமோ என்று அஞ்சினாள். எனவே கோயிலுக்குப் போகும் பழக்கம் அறவே நின்று விட்டது. இருப்பினும் வீட்டில் ஸ்ரீ மஹாலக்ஷ்மீயை பூஜை செய்து பஜனையும் செய்து வந்தாள். தன் மனக்குறைகளையெல்லாம் தேவியிடம் இறக்கி வைத்தாள். என்றாவது ஒரு நாள் தாய் நமக்கு கருணை புரியாமல் போக மாட்டாளா? என்று நம்பிக்கைக் கொண்டாள். இதனால் அவள் மனச்சுமை இறங்கி தைரியமாக குடும்பத்தை நடத்த முடிந்தது. இதற்கு காரணம் அவள் மனதில் இருந்த தெய்வ நம்பிக்கை கொஞ்சமும் குறையவில்லை.


ஒரு நாள் வழக்கம் போல் எல்லோரும் வெளியே அவரவர் வேலைக்குச் சென்ற பிறகு வாசல் கதவை தாளிட்டு உள்ளே ஏதோ வேலையாக இருந்தாள். தன் ஏழ்மையைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள். அச்சமயம் வாசற்கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்டது. ஷீலா இந்த ஏழையின் வீட்டுக்கு இந்த நேரத்தில் யார் வரப்போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டே, கை வேலையை நிறுத்திவிட்டு வாசற்கதவைத் திறந்தாள்.


அன்பே உருவான வடிவம், கருணையே நிறைந்த பார்வை, அமைதியான முகம், கடாக்ஷம் பொங்கிய பார்வையையுடைய ஒரு ஸ்த்ரீ நின்று கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த மாத்திரத்தில் ஷீலாவுக்கு தன் மனச்சுமை நிஜமாகவே இறங்கியது போல் தோன்றியது. அந்த அம்மாவை மகிழ்ச்சியுடன் வரவேற்றாள் ஷீலா. உட்கார வைக்க உயர்ந்த ஆசனம் ஏதும் இல்லை. ஒரு கிழிசல் பாயை போட்டு உட்கார வைத்தாள்.


'என்ன ஷீலா என்னை யார் என்று உனக்கு அடையாளம் தெரியவில்லையா?' என்றாள் அந்த அம்மா. அவள் சாட்சாத் ஸ்ரீ வைபவலக்ஷ்மீ தான். தனத்தைக் கொடுக்கும் தனலக்ஷ்மீயே ஸ்ரீவைபவ லக்ஷ்மீயாக ஒரு சாதாரண பெண் போல் உருவெடுத்து ஷீலாவிற்கு உபதேசிக்க வந்திருக்கிறாள்.


ஷீலா, 'அம்மா உங்களை அடையாளம் தெரியவில்லையே. உங்கள் உருவம் நான் இதுவரைப் பார்த்த எந்த உருவத்துடனும் ஒற்றுமை காணாததாக இருக்கிறது. நான் உங்களை எங்கும் இதுவரை பார்த்தில்லையே' என்றாள்.

'நீ மறந்து விட்டாயா, ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஸ்ரீ மஹாலக்ஷ்மீ கோவிலுக்கு வருவாய். பூஜையிலும், பஜனையிலும் கலந்து கொண்டு இருக்கிறாய். நீயே பூஜையும் பஜனையும் ஏற்பாடு செய்து நடத்தியுள்ளாய். நீ அங்கு வரும் பொழுது, நானும் அங்கு வந்திருக்கிறேன். உன்னை பலமுறை நான் பார்த்திருக்கிறேன்' என்றாள் அந்த தாய்.


அப்பொழுது ஷீலா தனக்குள் நினைத்துக் கொள்கிறாள், 'நான் சில நாட்களாக கோவிலுக்குச் செல்வதில்லை. கணவனின் போக்கு மனதிற்கு பாரமாக இருக்கு. வீட்டில் நிலைமையும் சரியில்லை. எனவே கோவிலுக்கு வரவில்லை' என.


'நீ அங்கு வராததால் நான் உன்னை இங்கு வந்து பார்க்கலாம் என்று வந்தேன். நீ எப்படி இருக்கிறாய்? உன் கணவர் எப்படி இருக்கிறார் ? குழந்தைகள் எல்லாம் வழக்கம் போல படித்து வருகிறார்களா?' என்று குடும்ப விசாரணை நடத்தினாள் வந்த அன்னை மஹாலக்ஷ்மீ.


இப்படி அந்த தாய் பேசியதைக் கண்ட ஷீலா மிகவும் மனம் நெகிழ்ந்து உருகிப்போனாள். அந்த அம்மாவின் வார்த்தைகள் ஷீலாவின் துக்கத்தை வெளிக் கொண்டு வந்தது. கண்களில் நீர் மல்கியது. வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவரத் தடைபட்டது. துக்கம் நெஞ்சையடைத்தது.

ஷீலா தன் துக்கத்தை நிறுத்திக் கொண்டு தனக்கு ஏற்பட்ட திடீர் ஏழ்மையையும், கணவனின் மாறுதல்களையும் தன் தாயிடம் கூறுவது போல் மிக உருக்கமாக நடந்தது நடந்தபடி எடுத்துரைத்தாள்.

'அம்மா ஷீலா ! அழாதே, வாழ்க்கையில் துக்கம் வந்தால் நிச்சயம் உடனே ஒரு பெரிய சுகம் காத்திருக்கிறது என்று அர்த்தம். துன்பமும் இன்பமும் மாறி மாறி வருவது தான் வாழ்க்கை. எனவே துக்கம் வரும் பொழுது மனம் தளராமல் கடவுளிடம் பாரத்தை போட்டு விட்டு பக்தி செய்ய வேண்டும். எனவே, நீ உன் கவலைகள் மறந்து எப்பொழுதும் செய்யக்கூடிய லக்ஷ்மீ பூஜையை இன்னும் விமர்சையாகச் செய். உன் துயரங்கள் யாவும் தூர விலகும்' என்றாள் அந்த அன்னை.


ஷீலா, 'நான் எப்படி அந்த லக்ஷ்மீ பூஜையை செய்ய வேண்டும் என்று விளக்கமாக நீங்கள் எனக்கு கூற வேண்டும். ஆசி வழங்க வேண்டும்' என்று வேண்டிக் கொண்டாள்.

சாட்சாத் ஸ்ரீ வைபவ லக்ஷ்மீ தொடர்ந்து  பூஜை செய்யும் முறையை விளக்கினாள்.

"லக்ஷ்மீ பூஜை" "வரலக்ஷ்மீ பூஜை" "வைபவ லக்ஷ்மீ பூஜை" என்று பல பெயர்களால் அழைக்கப்படும் ஸ்ரீ லக்ஷ்மீ பூஜையைச் செய்வது சுகம் தரும். பூஜையை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்ய வேண்டும் அல்லது பூஜை எடுத்துக்கொண்டு 11 அல்லது 21 வெள்ளிக்கிழமை தொடர்ந்து நம்பிக்கையுடன் செய்து விரதத்தை முடிக்க வேண்டும். பிரார்த்தித்துக் கொள்ளும் விஷயம் நிறைவேறும்.


அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு தினமும் செய்யக்கூடிய வீட்டு வேலை தெய்வ வழிபாடு இவைகளை முடிக்க வேண்டும். அன்று முழுவதும் மனதை ஸ்ரீ மகாலக்ஷ்மீயிடம் செலுத்தி "ஜய லக்ஷ்மீ" என்று ஜபித்து கொண்டிருக்க வேண்டும். கோபப்படாமல் அதிகம் பேசாமல் இந்த ஜபம் செய்வது நல்லது. காலையிலிருந்து உபவாசம் இருக்க வேண்டும். அன்று மாலையில் விளக்கேற்றும் நேரத்தில் பூஜையை தொடங்க வேண்டும்.


ஒரு ஆசனப் பலகையைப் போட்டுக்கொண்டு கிழக்கு முகமாக உட்கார வேண்டும். தான் உட்கார்ந்த இடத்துக்கு முன் கோலமிட வேண்டும். அந்த கோலத்தின் மேல் அரிசியை பரத்தி சதுர வடிவில் சரிசமமாக நிரவி அதன்மேல் ஒரு கலசத்தில் பூரண கும்பம் போல் தீர்த்தத்தை நிரப்பி வைக்க வேண்டும். தீர்த்தத்தில் (ஜலத்தில்) ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய், விலாம்புச்சிவேர் போன்ற வாசனை திரவியங்களை சிறிது சேர்க்கவும். கும்பத்தின் மேல் தங்கம், வெள்ளி, அல்லது சாதாரண நாணயங்களால் நிரப்பிய ஒரு தட்டை வைக்க வேண்டும். அதன் மேல் அல்லது கலசத்தில் அருகில் அஷ்டலக்ஷ்மீ படத்தையும், ஸ்ரீ வைபவலக்ஷ்மீ சக்ர (யந்தர) த்தையும் வைக்க வேண்டும். இவைகளுக்கு சந்தனம், குங்குமம், புஷ்பம் இவைகளால் அலங்காரம் செய்ய வேண்டும். பிறகு நல்லபடி பூஜையை செய்ய வேண்டும்.


ஸ்ரீ வைபவ லக்ஷ்மீயை மனதில் தியானம் செய்து கொண்டு அம்பிகையை அந்த கலசத்தில் யந்திரத்தில் இருப்பதாக பாவிக்க வேண்டும். தேவிக்கு செய்ய வேண்டிய எல்லா உபசார பூஜைகளையும் செய்து ஸ்ரீ வைபவ லக்ஷ்மீ த்யான ஸ்'லோகத்தை 11 அல்லது 21 முறை பாராயணம் செய்து கீழ்கண்டபடி த்யானித்து வேண்டிக் கொள்ள வேண்டும். "அம்மா என் கவலைகள் அனைத்தும் தீர்த்து செல்வமும் மகிழ்ச்சியையும் தந்து காத்திடு. என் போன்ற எல்லோரும் வாழ அனுக்கிரஹிக்கணும் தாயே" என்று வேண்டிக் கொள்ள வேண்டும். அன்னைக்குப் பிடித்தமான சர்க்கரை பொங்கல் அல்லது வெல்லம் போட்ட பொங்கல் நிவேதனம் செய்து 11 முறை "ஜய மாம் லக்ஷ்மீ" என்று கூறி ப்ரசாதத்தை கொஞ்சம் வைத்துக் கொண்டு மீதியை மற்றவர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.


கும்பத்தின் மேல் வைத்துள்ள நாணயத்தையே ஒவ்வொரு பூஜைக்கும் உபயோகப்படுத்த எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த கலசத்தில் உள்ள தீர்த்தத்தை கொஞ்சம் எடுத்து தான் உட்கொண்டு பிறருக்கும் கொடுத்து விட்டு மீதியை துளசிச் செடியில், கிணற்றில் ஊற்ற வேண்டும். கும்பத்தின் கீழ் வைத்த அரிசியை அரிசிபானைக்கடியில் வைக்கவும்.


இப்படி ஸ்ரீ வைபவலக்ஷ்மீயை முறையாக பூஜித்து தான் இன்பம் அடைந்து மற்ற பலரை இந்த் பூஜையில் ஈடுபடுத்தினால் அம்பாள் மனமகிழ்ந்து எல்லோருக்கும் அருள் புரிவாள் என்று விஸ்தாரமாக, ஷீலாவின் இல்லத்திற்கு வந்த அன்னை கூறி முடித்தாள்.


ஷீலா இதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்து அம்மா தாங்கள் கூறியபடியே நான் ஸ்ரீ வைபவ லக்ஷ்மீயை பூஜிக்கிறேன். தாங்கள் ஆசி கூற வேண்டும் என்றாள்.

மேலும், 'ஷீலா, இப்பூஜை செய்யும் முறையையும் வரலாற்றையும் கொண்ட புத்தகத்தை பூஜையை அதாவது விரதத்தை முடிக்கும் அன்று முடிந்தளவு 11, 21, 51, 101 புத்தகங்களை, குங்குமமிட்டு தாம்பூலத்தில் வைத்து எல்லோருக்கும் கொடுத்து மனப்பூர்வமாக அனைவருக்கும் அன்னையின் அருள் பெற வேண்டுமென்று வேண்டிக் கொள்ள வேண்டும்' என்று அந்த மாது கட்டளை இட்டாள்.


இதைக் கேட்டதும் ஷீலா, உண்மையிலேயே மன மகிழ்ந்தாள். சாக்ஷாத் ஸ்ரீமஹாலக்ஷ்மீயே, பக்தையான அவள் துயரத்தைப் போக்க எண்ணம் கொண்டு தானே ஒரு சாதாரண பெண் வேடம் பூண்டு இப்பூஜையை அவளுக்கு உபதேசித்திருக்கிறாள். ஷீலா போன்ற பெண்மணிகள் மட்டுமில்லாமல் எல்லோரும் இன்பமடைய வழியையும் கூறி மறைந்தாள்.


மறுநாள் வெள்ளிக்கிழமை கேட்க வேண்டுமா? ஷீலா மிக்க சிரத்தையுடனும், நம்பிக்கையுடனும், பக்தியுடனும் அன்னையின் கட்டளைப்படி பூஜையை செய்ய ஆரம்பித்தாள். சிரமம் இருப்பினும் தொடர்ந்து செய்து வந்தாள். என்ன வியப்பு! அவள் குடும்பம் சில நாட்களில் பழைய நிலையை அடைந்து விட்டது. அவள் கணவன் கெட்ட குணங்களிலிருந்து திரும்பி பொறுப்பாக நடந்து கொண்டான். குடும்பத்தில் செல்வமும், மகிழ்ச்சியும் பெருகியது. அவர்கள் மனதில் அமைதியும் நிலவியது.


ஷீலாவின் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள அண்டை அயலார் எல்லோரும் அவள் ஏழ்மை நீங்கியதைக் கண்டு வியப்படைந்தனர். ஒவ்வொருவராக வந்து விசாரித்தனர். ஷீலா, " ஸ்ரீ வைபவ லக்ஷ்மீ" விரத பூஜா மகிமையை விவரித்துக் கூறினாள். அவர்களும் செய்யத் தொடங்கினர். முன்போல் எல்லோரும் மிக விமர்சையாக ஸ்ரீ மஹாலக்ஷ்மீ கோவிலிலும் பூஜை செய்து, பஜனை முதலியவற்றை செய்தனர். அந்நகரமே மிகவும் லக்ஷ்மீகரமாக ஆயிற்று.


நீங்களும் இந்த ஸ்ரீ வைபவ லக்ஷ்மீ பூஜையை செய்யத் தொடங்குங்கள். உங்களுக்கும் உங்கள் சுற்றத்தினருக்கும் அன்னை காட்சி தந்து அருள் பாலிப்பாள்.

No comments:

Post a Comment