Friday, October 19, 2012

Sri Ambal Puja in Tamil - ஸ்ரீ அம்பாள் தமிழ்ப்பூஜை முறை

Picture Courtesy - Google Images


 ஸ்ரீ அம்பாள் தமிழ்ப்பூஜை முறை
ஸ்ரீ அம்பிகையை தனித்தமிழில் வழிபாடு செய்வதற்கு கீழ்க்கண்ட பாடல்களை பாடித் துதிக்கலாம். சம்ஸ்கிருதம் படிக்காதவர்கள் அல்லது தெரியாதவர்கள் தமிழ்பாடல்களாக உள்ள மந்திரங்களைச் சொல்லுவது மிகச் சிறந்த பலன்களை அளிக்கும்.  திருஈங்கோய்மலை ஸ்ரீ லலிதாம்பிகை கோயிலில் இப்பாடல்களை பாடி பூஜை நடைபெறுகிறது என்றும்,  இப்பாடல்களை இயற்றியவர்கள் ஸ்ரீலலிதா மஹிளா சமாஜத்தவர்கள் என்றும் தெரிய வருகிறது. அவர்களுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கமும் நன்றியும். 

"ஷோடசோபசார பூஜை" என்று வடமொழியில் சொல்லப்படும் 16 வகை உபசார பூஜை மந்திரங்களை அழகாகத் தமிழ்ப்படுத்தி, அற்புதமான பாடல் வரிகளாக்கித் தந்திருக்கிறார்கள். எளிமையான தமிழில் உள்ள இந்த ஸ்ரீ அம்பாள் பூஜை பாடல்களின் மூலம் தமிழ் அறிந்த அனைவரும் என் அன்னை ஸ்ரீலலிதாம்பிகையை போற்றி அவளின் அளவில்லாத அருளினால் வாழ்வில் வளத்தோடும் நலத்தோடும் வாழ வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம்.


1. மணி அடித்தல்
நன்மைசெய் தேவ ரெல்லாம் நண்ணவும் இங்கே வந்து

திண்மைசெய் அசுர ரெல்லாம் திசைதொறும் இரியவுந்தான்
முன்மணி அடித்து நன்றாய் முதல்வியைப் பூஜை செய்ய
இன்மணி நாதந் தன்னை எங்குமே முழங்குவேனே.

2. தூய்மை செய்து கொள்ளுதல்
தூய்மையாய் இருப்பரேனும் தூய்மையே இல்லா ரேனும்

சேய்மையில் இருக்கத் தக்க செய்கைகள் நிலைமை கொண்ட
வாய்மையில் யாவ ரேனும் மாலலிதை நினைவு கொண்டால்
போய்மைகள் புறம்பு முள்ளும் புனிதராய் ஆவார் தாமே.


3. நற்பொழுதாக்கிக் கொள்ளுதல்
அம்பிகை லலிதா தேவீ அருள்துணைப் பாதம் தன்னை
நம்பியே நெஞ்சில் வைத்தேன் நல்லநாள் இதுவே என்றோ
அம்புலி பலமும்தாரா ஆற்றலும் அரிய லக்னம்
தெம்புசெய் வித்தை தானும் தெய்வத்தின் பலமுமாமே.

4. மங்களாசரணம்
குருகண பதிகள்பீடம் குலவுபை ரவர்கள் சித்தர்

திருமிகு வடுக ரோடு சீர்பத மிரண்டும் தூதீ
வரமிகு வீரர் விரா வலியொடு மந்திரங்கள்
குரவர்மண்டலமும் நெஞ்சில் குறித்துநான் வணங்குவேனே

5. சங்கல்பம் (பூஜை செய்யும் நாள், நட்சத்திரம் முதலியவற்றைச் சொல்லி, கோரும் பலன்களையும் கூறி, பூஜை நன்முறையில் நிறைவேற அம்பிகையின் அருள் வேண்டி உறுதி கொள்ளுதல்)
இன்றுள பிரம்ம தேவர்க் கிரண்டாம் பரார்த்தம் தன்னில்

கன்றலில் சுவேத ஏன கற்பத்தில் ஏழாம் ஆட்சி
இன்றுள மனுவின் நாளில் ஏழுநான்காம் கலியில் ஒன்றாம்
நன்றுறு பாதந் தன்னில் நல்வருட மாத நாளில்

நாவலந் தீவில் நண்ணும் பாரத வர்ஷ நாப்பன்

மேவிடும் பரத கண்டம் மேருவின் தென்பால் இந்த
தேவரும் விரும்பும் புண்ய தேசத்தில் க்ஷேத்தி ரத்தில்
மேவிய வடைய வித்யா விமலையைப் பூஜை செய்வேன்.

6. தியானம் (அம்பிகையின் திருவுருவைத் தியானித்தல்)
நான்முகன் திருமால் உருத்திரன் மயேசன் நால்வரும் கால்களே யாக

மேன்மரு பலகை சதாசிவனாக மேவுசிம் மாசனந் தன்னில்
தேன்மலர் கரும்புவில் பாசமங் குசமும் திருக்கரங் கொண்டுவீற் றிருக்கும்
பான்மைசேர் சக்தி பராபரை லலிதை பதமலர் மனத்தினுற் பதிப்பாம்.

7.ஆவாஹனம் (அம்பிகையை பூஜிக்கும் இடத்துக்கு எழுந்தருள வேண்டுதல்)
அன்னையே லலிதா தேவி! அருவமாய்ப் பிரம்ம மாக

மன்னியே என்றும் எங்கும் மாஞான வானாய் நிற்கும்
உன்னையே பூசித் துய்ய உன்னினோ முருவம் தன்னில்
என்னையாட் கொள்ள விங்கே எழுந்தருள் புரிவாய் நீயே.

8. ஆஸனம் (அம்பிகை அமர வேண்டி இருக்கை அளித்தல்)
ஐந்தொழில் புரியும் ஈசர் ஐவரும் தாமே சேர்ந்து

மைந்துடைப் கனக ரத்ன மகாசிம்மா சனமா யுள்ளார்
ஐந்தொழு படியோ டொன்றும் அதற்குள் அதன்மீ தேறி
உய்ந்திட யாங்க ளுட்கார்ந் துவப்புட விருப்பாய் தாயே

9. பாத்தியம் (அம்பிகையின் திருப்பாதங்களை நல்ல நீர் கொண்டு அலம்புதல்)
வேதங்கள் சிலம்பாய் ஆர்க்கும் மேன்மைசேர் மலர்போன்றுள்ள

பாதங்கள் அலம்ப நல்ல பாத்தியத் தீர்த்தம் கொண்டு
பாதங்கள் அலம்பி நல்ல பட்டினால் துடைத்துவிட்டேன்
ஏதங்கள் அகலும் வண்ணம் ஏற்றருள் புரிவாய் தாயே

10. அர்க்கியம் (அம்பிகையின் திருக்கரங்களை அலம்புதல்)
மலர்களை ஒத்த கைகள் வதனமும் சுத்தி செய்ய

மலர்கமழ் அர்க்ய தீர்த்தம் மகிழ்வுடன் அளித்தேன் ஏற்று
பலர்புகழ் அருளாம் செல்வ பாக்கியம் பெற்று வாழ
மலர்தலை உலகிற் செய்வாய் மண்புறும் லலிதா தேவீ  !

11. ஆசமனம் (அம்பிகை அருந்துவதற்கு நீர் சமர்ப்பித்தல்)
ஆசமனம் செய்ய நல்ல அமுதம் போல் தீர்த்தம் தந்தேன்

பாசமலம் போக்கி மேலாம் பதத்தினை அருள்வாய் கையில்
பாசமுமங் குசமும் வில்லும் பாணமும் கொண்டசக்தீ !
ஈசர்தமக் கெல்லாம் ஈசீ !  எழிற்பரா பரையே போற்றி.

(9,10, 11 ஆகிய உபசாரங்களைச் செய்யும் போது, அந்த உபசாரங்களை அம்பிகைக்குச் செய்வதாகப் பாவித்து, உத்தரிணியால் பாத்திரத்தில் நீர் சேர்க்க வேண்டும்.)


12. மதுபர்க்கம் (பசுவின் பால், தயிர், நெய், தேன் கலந்து அம்பிகைக்கு சமர்ப்பித்தல்)
தேனுவின் தயிர்பால் நெய்யும் தேனோடு கலந்து செய்த

வானமது பர்க்கம் தன்னை வைத்தனன் பொற்கிண் ணத்தில்
நீநுகர்ந் தன்னாய் ! எங்கள் நிகிலமாம் வேட்கை தீர்ப்பாய்
நீநுகர் வனமெல் லாமும் நின்தொண்டர் பொருட்டே அன்றோ

13. பஞ்சாமிர்தாபிக்ஷேகம் (அம்பிகைக்கு பஞ்சாமிர்தம் சமர்ப்பித்தல்)
பாலோடு நெய்யும் தேனும் பழங்களின் ரசமும் சேர்த்து

நாலோடு கற்கண் டின்தூள் நல்லசர்க் கரையும் கூட்டி
வேலோடு விளங்கும் கையாள் விநாயகன் சிவனும் போற்றும்
காலுடை லலிதே ! பஞ்சா முதாபி க்ஷேகம் கண்டேன்

14. பாலாபிஷேகம்

தண்மையாய் இனிமை யாயும் தகுமணம் சேர்ந்த தாயும்

வெண்மையாய் தூய்மை யான மிகுநல பசுவின் பாலால்
உண்மையாய் அறிவா னந்த உருவமாம் லலிதா தேவீ !
உண்மகிழ்ந்தபிஷே கித்தோம் உவப்புடன் அருள்வாய் தாயே

15. தீர்த்த ஸ்நானம்
கங்கையே முதலாம் மிக்க கடவுள்மா நதிகள் தீர்த்தம்

தங்கமா கலசம் தம்மில் தகுமணம் மதுவும் சேர்த்தே
அங்கமின் படையும் வண்ணம் ஆடநீர் அபிஷேகித்தோம்
எங்களை ஆண்டு கொள்வாய் ஈஸ்வரீ லலிதா தேவீ !

16. வஸ்திரம்
சேலையும் ரவிக்கை மேலும் செம்பட்டுச் சரிகைத் தங்க

நூலையே கொண்டு நெய்து நூதன அழகாய்த் தோன்றும்
வாலையின் தாயே தந்தேன் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வாய்
வேலைசூழ் உலகில் நாங்கள் மேன்மையாய் வாழு மாறே

17. ஆபரணம்
மணியணி மகுடம் சுட்டி மகிழ்மூக் குத்திகாதில்

அணியுறுந் தோடு தொங்கல் அட்டிகை பதக்கம் முத்தும்
மணிகளும் கோத்த மாலை மாங்கல்யமுதலா யுள்ள
அணிகல மெல்ல மேற்றே அருள்புரி லலிதா தேவீ  !

18. சந்தனம்
சந்தனம் புனுகு பன்னீர் ஜவ்வாது குங்கு மப்பூ

கந்தமார் அகரு பச்சைக் கர்ப்பூரம் கஸ்தூரித்தூள்
அந்தமாய் எல்லாம் ஒன்றாய் அரைத்துநான் குழைத்துவைத்த
கந்தமும் பூசத் தந்தேன் காமேசீ ஏற்றுக் கொள்வாய்

19. குங்குமம்
பொங்கும்உன் அருளைக் காட்டும் புத்தியும் சித்தி நல்கும்

துங்கவெண் ணீறும் மண்ணும் துலங்குற இட்டா ரேனும்
இங்கிதை நடுவண் கொள்ளார்க் கெழில்முத லியாது மின்றாம்
குங்குமப் பொட்டு வைத்தேன் குறைகளை லலிதா தேவீ !

20. அக்ஷதை

அக்ஷரப் பிரம்ம மாயும் அனைவரின் ஆன்மா வாயும்

அக்ஷரம் ஐம்பத்தொன்றாய் அமர்ந்துள பிராண சக்தி !
அக்ஷய தேவீ ! பச்சை அரிசியில் மஞ்சள் சேர்த்த
அக்ஷதை அளித்தேன் ஏற்றே அக்ஷயப் பலனை ஈவாய்

21. புஷ்பம்
மல்லிகை ஜாதி ரோஜா மகிழ்மா தாழைபிச்சி

முல்லைசண் பகமேபுன்னை முண்டகம் குவளை சோகம்
அல்லிசெங் கழுநீர் நீபம் அலரியே முதலாம் பூக்கள்
தல்லியே லலிதா தேவீ ! சாத்தினேன் அருள்வாய் நீயே.

பதினாறு அர்ச்சனை

ஓம் ஐம் ஹ்ரிம் ஸ்ரீம்

அருளுப தேசம் செயுமவ ருள்ளே

குருவடி வாயிருந் தருள்வாய் போற்றி    ....1

வக்கிர துண்டரின் வடிவாய் விளங்கி

விக்கின விநாசம் செய்வாய் போற்றி       ....2

வாக்கினில் வாணி வடிவாய் இருந்து

வாக்கு வன்மையை அருள்வாய் போற்றி  ...3

பல்வகை நன்மையும் இன்பமும் பயக்கும்

செல்வம் அருளும் செல்வியே போற்றி   ....4

பழமையை ஒழித்துப் புதுமையைப் பெற்றிட

அழிவுசெய் சக்தியாம் அபர்ணையே போற்றி ...5

அறுமுகன் வடிவாய் அசுரர் குழவினைச்

செறுதல் செய்யும் தேவியே போற்றி      ....6

சிவனெனும் வடிவாய்த் தேவீநீ யமர்ந்து

பவமதை யறுப்பாய் பரையே போற்றி     ....7

திருமால் உருவாய் திகழ்ந்திடுந் தேவீ

கருமேக மென்னும் கருணையே போற்றி  ....8

இராமரின் உருவாய் இராவணற் செற்றுத்

தராதலங் காத்த தருணீ  போற்றி         ....9

கண்ணனின் உருவாய் வேய்ங்குழல் ஊதி

அண்ணல் கீதையை அருளினாய் போற்றி ....10

வாராகி யென்னும் சேனா பதினியாய்த்

தேராரை அழிக்கும் தெய்வமே  போற்றி  ....11

மந்திர நாயகி சியாமளை என்னும்

மந்திரி ணியாகிய மகதீ  போற்றி        ....12

ஐந்தொடு நாண்கா வரணங் களிலுறை

மைந்துடை யோகினி கணமே போற்றி   ....13

சசக்ர ராஜமாம் ஸ்ரீ சக்கரத்தினில்

செக்கர்போன் றொளிரும் சிவையே போற்றி..14

கலிகளை அகற்றக் கருணையா லுருவாய்

லலிதையாய் வந்த நலிவிலாய் போற்றி   ...15

அருவமாய் எங்கும் அனைத்திலும் நிறைந்த

பிரமமே உள்ளப் பிரகாசமே போற்றி     .....16

பூப்பொழிதல்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்

ஈசுரர் தேவர் இருடி கள் மனிதர்

பாசுர மாகிய பருதி சந்திரன்              1

மொய்ம்புடைச் சக்திகள் முடிவிலா உயிர்கள்

ஐம்பெரும் பூதம் அனைத்துமாய் இருந்தும்  2

அல்லா துயர்ந்த அன்னையே லலிதா !

பொல்லாமை யில்லா நல்லாய் நாமம்      3

பதினாறு சொல்லிப் பாமலர் பொழிந்தேன்

பொதுவிலா தருள்வாய் போற்றி போற்றி   4

22.  தூபம்
குங்குலியம் தசாங்கம் சேர்ந்த குலசாம் பிராணித் தூபம்

இங்குநீ முகரத் தந்தோம் எழில்மிகும் லலிதா தேவீ !
எங்களுள் ளத்தி லுள்ள எண்ணங்கள் முடியு மாறு
கங்குக்கண் ணோக்கம் செய்வாய் கருணைவா ரிதியே போற்றி

23.  தீபம்
தெளிவுடை வாணி செல்வி தெறுசக்தி சேர்ந்தா லொப்ப

ஒளியொடு சுடரும் சூடும் ஒன்றிய தீபம் தன்னை
நளினநூல் திரியை யிட்டு நறுநெய்யை ஊற்றி ஏற்றி
களியுடை லலிதா தேவீ ! காட்டினேன் அருள்வாய் ஏற்று

24. நைவேத்யம்
நால்வகை அன்னம் ஆறு நாச்சவை உடைய வாகப்

பால்வகைப் பழமும் சேர்த்துப் படைத்தனன் ஏற்றுக் கொண்டு
நூல்வகை எல்லாம் ஓர்ந்த நுண்ணறி வுடையே னாகக்
கால்வணங் கென்னைச் செய்வாய் கல்யாணீ லலிதா தேவீ  !

25. பழம்

இன்நறும் பலவும் வாழை இனியமா விளாவும் கொய்யா

தென்னையும் திராக்ஷை ஈச்சை திகழ்கிச் சிலியும் நாவல்
அன்னிய நாட்டின் வந்த அருங்கனி பலவும் இங்கே
முன்னுறப் படைத்தேன் ஏற்று முதல்விநீ அருள்செய் வாயே

26. தாம்பூலம்
பாக்குகுங் குமப்பூ லவங்கம் பச்சைகற்பூரம் ஏலம்

ஊக்குகஸ் தூரி ஜாதி உவப்புறு கத்தக் காம்பு
நோக்குவெற் றிலையிற் சேர்த்து நுடக்கியே வைத்து வீடி
ஆக்கிய தாம்பூ லத்தை அளித்தனம் லலிதாம் பாளே !

27. கற்பூர ஆரத்தி
பங்கயா சனன்மால் திங்கள் பவளவார் சடையான் ஏசு

கங்கைமா வாணி துர்க்கை கணபதி முதலோராய
இங்குமா வுலகோர் போற்றும் ஈசர்க்கட் கெல்லாம் ஆன்மா !
துங்கநற் கர்ப்பூரத்தால் ஜோதியா ரத்தி செய்தேன்

28. மந்திர புஷ்பாஞ்சலி
கொடியினிற் செடியிற் றருவிற் குளத்தினிற் பூக்கும் பூவில்

கடி கமழ் வாசப் பூக்கள் கழிசெம்மை நிறமாம் பூக்கள்
விடியுமுன் னெடுத்து வைத்து விமலைமந் திரமும் கூட்டி
அடிவரை முடியிற் றூவி அஞ்சலி செய்தே னாள்வாய்

29. சுவர்ண புஷ்ப தக்ஷிணை

பூஜையின் பலனை யெல்லாம் பூர்ணமாய் அடைவதற்காய்

தேசுறு சுவர்ண புஷ்ப தெக்ஷிணை அளித்தேன் ஏற்றே
ஈசர்கள் யாவ ருக்கும் ஈசியாம் லலிதா தேவீ  !
மாசுகள் எல்லாம் போக்கி மாண்பருள் செய்வாய் தாயே !

30. பிரதக்ஷிணம்
பிரபஞ்ச மெல்லா மாகிப் பின்னுமப் பாலு முள்ள

பிரம்மமே லலிதா தேவீ ! பிரதக்கிண முன்னைச் செய்தேன்
சிரம்முதற் கரத்தாற் காலால் சினைகளால் செய்த பாவம்
திரம்பெறா தழியு மாறு செய்கநீ செகதம் பாளே !

31. நமஸ்காரம்
தலையொடு கையும் காலும் தகுமுரம் வயிறு தானும்

நிலமிசைப் படியுமாறு நினைவொடு துதியும் பாடி
மலர்தரு கண்களாலே வடிவினைப் பார்த்தும் எட்டு
நலமுறும் அங்கத் தாலே நளினியே !  வணக்கம் செய்தேன்

32. பிரார்த்தனை
ஈசரும் தேவர் சித்தர் இருடிகள் முனிவர் சக்தி

மாசரும் யோக ரெல்லாம் மகிமைசேர் லலிதையுன்னைப்
மசைசெய் திஷ்டசித்தி புகழொடு பெற்றா ரென்றால்
ஆசைகொண் டுன்னைப் போற்றும் அடியவர் அடையா துண்டோ !

பூசையும் அறியேன் உன்னைப் புகழ்தலும் அறியேன் உன்பால்

நேசமும் இல்லேன் நிற்கு நேரிலாக் கருணை யுள்ளாய்
ஆசையால் லலிதா தேவீ !  அறிந்தவா செய்தேன் பூஜை
ஈசருக் கெல்லாம் ஈசீ !  ஏற்றருள் செய்வாய் நீயே

No comments:

Post a Comment