Thursday, July 19, 2012

Naga Chaturthi and Garuda Panchami Part I - நாக சதுர்த்தியும், கருட பஞ்சமியும்....பகுதி 1

நாக சதுர்த்தியும், கருட பஞ்சமியும்....பகுதி 1
ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியை  நாக சதுர்த்தியாகவும், மறுநாள் பஞ்சமி திதியை கருடபஞ்சமி/நாக பஞ்சமியாகவும் கொண்டாடுவது வழக்கம். இவ்வருடம், வரும் ஞாயிற்றுக் கிழமை, 22:7:2012 அன்று நாக சதுர்த்தியும், 23:7:2012 அன்று கருட பஞ்சமியும் வருகிறது.
நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமியை கொண்டாடும் வழக்கம் தமிழ்நாட்டில் இல்லை என்றே கூறலாம். ஆனால் மற்ற மாநிலங்களில் இவை இரண்டும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
சர்ப்ப (நாகம்) தோஷம் உள்ளவர்கள்  இந்நாளில் நாக தேவதையையும், கருட பகவானையும் வழிபட்டால், அவர்கள் பெருங்கருணையால், அந்த தோஷத்தினால் வரும் பாதிப்புகள் கட்டாயம் நீங்கும்.
நாக சதுர்த்தி, கருட பஞ்சமி ஆகிய பண்டிகைகளைக் கொண்டாடுவதன் காரணம் குறித்த புராணக் கதைகள்:
புராணங்களில் இதற்கென நிறைய கதைகள் இருந்தாலும் நாம் குறிப்பிட்டு சொல்லக்கூடியவை
1. பகவான் ஸ்ரீமஹாவிஷ்ணு ஸ்ரீகிருஷ்ணராக திருஅவதாரம் எடுத்து கோகுலத்தில் வளர்ந்து வருகையில், அவர் செய்த லீலா விநோதங்கள் ஏராளம்.  அவற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது காளிங்க நர்த்தனம்.
காளிங்கன் என்னும் கொடிய நச்சுப்பாம்பின்  ஆணவத்தை அடக்கி அதன் தலைமேல் பரமாத்மா தன் சின்னஞ்சிறு செந்தாமரைத் திருவடிகளை வைத்துச் செய்த நர்த்தனம் தான் காளிங்க நர்த்தனம். காளிங்க நர்த்தனத்தை அற்புதமாக வர்ணிக்கும் நாகலீலா ஸ்தோத்ரத்தை படிக்க இங்கு சொடுக்கவும்.
அத்தகைய காளிங்க நர்த்தன லீலை நடைபெற்ற நன்னாளையே நாக சதுர்த்தியாகக் கொண்டாடுகிறோம்.

2.மகாபாரதத்தில், அபிமன்யுவின் மகனான பரீக்ஷித் மஹாராஜா, ஒரு சமயம், தான் செய்த தவறின் காரணமாக,  தக்ஷகன் என்னும் சர்ப்பம் தீண்டி மரணமடையும் சாபத்தைப் பெற்று  அவ்வண்ணமே, தக்ஷகன் தீண்ட, மரணமடைந்தார். அவர் மகனான ஜனமேஜயன் இதனால் கோபமுற்று, தக்ஷகனைப் பழி தீர்க்கவும், சர்ப்பக் குலத்தையே பூண்டோடு ஒழிக்கவும் சபதம் செய்து சர்ப்ப யாகம் துவங்கினார். சர்ப்பங்கள், அந்த யாகத்தின் பலனாக, சாரிசாரியாக தாமாகவே வந்து யாகத்தீயில் வீழ்ந்து மடியத் துவங்கின. அப்போது 'ஆஸ்திகர்' என்ற ரிஷி, ஜனமேஜயனுக்கு நல்லுபதேசங்களைக் கூறி, கோபம் தணியச் செய்து, யாகத்தை நிறுத்தினார்.
காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பது விதி.  இவ்வாறு சர்ப்பயாகத் தீயில் விழுந்து மடிய, சர்ப்பங்களும் சாபம் பெற்றிருந்தன.

முன்னொரு காலத்தில், பாற்கடலைக் கடையும் கயிறாக இருந்த வாசுகி என்ற நாகம், தன் தாய் கத்ருவின் சாபத்தின் காரணமாக, சர்ப்பயாகத்தில் வீழ்ந்து மடிய இருக்கும் தம் குலத்தைக் காப்பாற்றும் வழி தேடி பிரம்ம தேவரிடம் முறையிட, அவரும், ஜரத்காரு என்ற பெயர் கொண்ட வாசுகியின் தங்கையை அதே பெயர் கொண்ட ரிஷிக்கு மணம் முடித்தால், அவர்களுக்குப் பிறக்கும் புத்திரன், சர்ப்பயாகத்தை நிறுத்துவான் என்றும் இப்பூவுலகில் நாக இனம் கடவுளாகக் கருதி வழிபடப்படும் என்றும் வரமளித்தார் (அவ்வாறு ஜரத்காரு மஹரிஷிக்கு பிறந்த மைந்தனே ஆஸ்திக ரிஷியாவார்).
இவ்வாறு தங்கள் குலம் காக்க வாசுகி நாகம் வரமடைந்த நன்னாள் சிராவண சுக்ல பஞ்சமி திதியாகும். ஆகவே, அந்த புண்ணியத் திருநாளில், நாகங்களை வழிபடும் முறை வந்தது.
 
3. நாக சதுர்த்தி குறித்த மற்றொரு கதை:
ஓரு சமயம் விவசாயி ஒருவன் தன்னுடைய நிலத்தை உழுது கொண்டிருக்கும் பொழுது, அவன் அறியாமல், ஏர் முனை பட்டு, அங்கிருந்த ஒரு பாம்புப் புற்று இடிந்து, அதில் வசித்து வந்த நாகங்கள் மாண்டன. அந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த அந்த சர்ப்பக் குடும்பத்தின் வாரிசான ஒரு நாகம், திரும்பி வந்து தானில்லாத நேரத்தில், தன் குடும்பத்தினருக்கு நேர்ந்த கதியை அறிந்து, மிகுந்த ஆத்திரத்தோடு, அந்த விவசாயியின் குடும்பத்தினர் அனைவரையும் தீண்டி, அவர்களை எமனுலகுக்கு அனுப்பியது.
அப்போதும் அதன் கோபம் அடங்கவில்லை. அவ்விவசாயியின் மகள் திருமணமாகி மற்றொரிடத்தில் அவள் கணவன்,  குடும்பத்தாரோடு வசித்து வந்தாள். அவளையும் பலி கொள்ளும் நோக்கில் அவள் வீட்டிற்கு சென்ற பொழுது அவள் ஆதிசேஷனை வழிபட்டு கொண்டு இருந்தாள். அவளை கோபத்துடன் பார்த்த சர்ப்பம் அவளை தீண்டும் நோக்கில் வேகத்துடன் சென்ற போது அவள் ஆதிசேஷனின் நைவேத்யத்திற்காக ஜன்னலில் வைத்திருந்த பாலில் தவறி விழுந்தது.  பாலின் குணம் சாந்தமடைய செய்வது. அதற்கு சர்ப்பங்களும் விதிவிலக்கல்ல. ஆகவே, கோபத்தால் வெகுண்டெழுந்து வந்த சர்ப்பம், சினம் தணிந்து மிகவும் சாந்தமடைந்தது.
ஆதிசேஷன் மீது அவள் வைத்திருந்த பக்தியைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்த நாகம், அவளோடு மனிதக்குரலில் பேசத்தொடங்கியது. "மகளே! நான் உன் குடும்பத்தார் அனைவரையும் கொன்று உன்னையும் கொல்வதற்காகத்தான் இங்கு வந்தேன். ஆனால் நீ ஆதிசேஷன் மேல் கொண்ட தூய பக்தி உன்னை காப்பாற்றியது.  உனக்கு நான் ஏதாவது வரமளிக்க வேண்டும். என்ன வேண்டும் கேள்!!!" என, அதற்கு அவள், "அறியாமல்  பிழை செய்த என் குடும்பத்தாரை மன்னித்து அவர்களை உயிர்ப்பித்து அருள வேண்டும்" என்று வேண்ட, நாகமும் அவ்வாறே நடக்கும் என்று வரமளித்து சென்றது.
இவ்வாறு வரம் பெற்ற நன்னாளை, அக்குடும்பத்தினர் அதன் பின்னால் நாக சதுர்த்தியாக வழி வழியாக கொண்டாட ஆரம்பித்தனர்.
 
பூஜை முறைகள்:
பூஜை முறைகள், அவரவர் பத்ததிக்கு (குடும்ப வழக்கத்திற்கு) ஏற்ப வேறுபட்டாலும் பொதுவாக சோஷடசோபசார பூஜை நாக சதுர்த்தி அன்று நாகருக்கும், கருட பஞ்சமி அன்று கருட பகவானுக்கும் செய்யலாம். இப்பதிவில் சில பொது வழிமுறைகளை குறிப்பிட்டுள்ளேன். இவை பொதுவாக, பழக்கத்தில் உள்ள வழிமுறைகள்.
 
நாக சதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி அன்று காலையில் வீட்டில் உள்ள பெண்மணிகள் எண்ணெய் ஸ்நானம் செய்து விட்டு புற்று இருக்கும் இடத்திற்குச் சென்றோ அல்லது கல்லினால் செய்த நாக சிலா ரூபத்திற்கோ, அல்லது வெள்ளி  நாகர்  விக்கிரத்துக்கோ அல்லது புற்று மண்ணில் பால் ஊற்றி செய்த நாகர் சிலையை வைத்தோ பூஜை செய்யலாம்.
பூஜை செய்யும் இடத்தில் ஒரு மணையின் மீது நாக உருவத்தை ரங்கோலி கோலமாக போட்டும், வீட்டிற்கு வெளி வாசலில் உள்ள சுவற்றின் இருபக்கமும் நாகர் ரங்கோலி கோலத்தை வரைந்தும் பூஜை செய்யலாம். மஞ்சள், குங்குமம் இட்டு, கஜவஸ்திரம் அணிவித்து (பஞ்சினால் நீளமாக, சற்றுத் தடிமனாகத் திரித்துக்கொண்டு, நடுநடுவில் குங்குமம் வைத்து, கையினால் அழுத்த,அது வெண்பஞ்சு உருண்டைகளின் இருபுறமும் குங்குமம் இட்ட மாலை போல் வரும்), மலர்களால் நாகராஜா அஷ்டோத்திரம் சொல்லி வழிபடவேண்டும். எள்ளினால் செய்யப்பட்ட சிகலி மற்றும் பச்சை அரிசியினால் தயாரிக்கப்பட்ட தம்பிட்வையும் நைவேத்யமாக நாகருக்கு அளிப்பர்.  (மேல் விவரங்களுக்கு அருகில் உள்ள பண்டிதரை அணுகி தெரிந்து கொள்ளலாம்).
ஷோடசோபசார பூஜையின் முறை
1. ஆசமனம்
2. சங்கல்பம்
3. ஷோடசோபசார பூஜை:
4. கலச பூஜை
5. பீட பூஜை
6. ப்ராணப்ரதிஷ்டை
7. த்யானம் (இது மத்வ சம்பிரதாயத்தில் பின்பற்றப்படுவது. தங்கள் சம்பிரதாயங்களுக்கு ஏற்ப இதை மாற்றிக்கொள்ளவும்).
ப்ரஹ்மாண்டதாரபூதம் ச புவனாம்தரவாசினம் பணாயுக்தமஹம் 
த்யாயேத் நாகராஜம் ஹரிப்ரியம் நாகாம்தர்கடசங்கர்ஷ்ணாய நம: 
த்யாயாமி த்யானம் சமர்ப்பயாமி
8. ஆவாஹனம்.(நாகராஜரை எழுந்தருளச் செய்தல்)
9. ஆசனம் (இருக்கை அளித்தல்)
10. சமர்ப்பணம்:
a) பாத்யம் (திருவடிகளை அலம்புவதாகப் பாவித்து பாத்திரத்தில் நீர் சேர்த்தல்)
b) அர்க்யம் (திருக்கரங்களை அலம்புவதாகப் பாவித்து பாத்திரத்தில் நீர் சேர்த்தல்)
c) ஆசமனம் (நீர் சமர்ப்பித்தல்)
d) மதுபர்க்கம் (தேன் சமர்ப்பித்தல்)
e) பஞ்சார்மித ஸ்நானம்
f) ஸ்நானம்
g) வஸ்த்ரயுக்மம் (வஸ்திரம் சமர்ப்பித்தல்)
h) யக்ஞோபவீதம் (பூணூல் சமர்ப்பித்தல்)
i) ஆபரணம் (தங்க, வெள்ளி ஆபரணங்களை சமர்ப்பித்தல்)
j) கந்தம் (சந்தனம் சமர்ப்பித்தல்)
k) அக்க்ஷதம் அதாவது அட்சதை 
l) புஷ்பம்.
11. அங்க பூஜை
11.a(நாகராஜர் அஷ்டோத்திரம் சொல்லி மலர்களால் அர்ச்சித்தல்)
12. தூபம் சமர்ப்பணம் (ஊதுபத்தி அல்லது தசாங்கம் ஏற்றிக் காட்டுதல்)
13. தீபம் தரிசனம் (ஒற்றை தீபம் ஏற்றிக் காட்டுதல்)
14. நைவேத்யம்
    பால், தயிர், நெய், ஊற வைத்த கடலைப்பருப்பு, பழம், தேங்காய்(உடைத்தது) முதலியவை...
15. பாநீயம் சமர்ப்பித்தல்
16. பலானி சமர்ப்பித்தல் (பழங்களைச் சமர்ப்பித்தல்)
17. தாம்பூலம் (வெற்றிலை பாக்கு சமர்ப்பித்தல்)
18. தட்சிணை
19. மங்கள நீராஞ்சனம் அதாவது கர்ப்பூர ஆர்த்தி
20. மந்த்ரபுஷ்பம்
21. ராஜோபசாரம்
22. ப்ரதக்ஷிண நமஸ்காரம்
23. ப்ரார்த்தனை
24. வாயன தானம் (இதுவும் மாத்வ சம்பிரதாயத்தை தழுவியது).
 
அன்னையர் தமது குழந்தைகள் நன்றாக இருப்பதற்காகவும். சகோதர, சகோதரிகள் தங்களது சகோதரி, சகோதரர்கள் நன்றாக வளமாக இருக்க வேண்டும் என்றும் நாக தேவரிடம் வேண்டி உபவாசம் இருப்பார்கள். சில குடும்பங்களில் நாகருக்கு பூஜை செய்பவர் உப்பில்லாமல் சாப்பிடும் வழக்கமும் உண்டு.  
இதன் தொடர்ச்சியை நாளைய‌ பதிவில் காணலாம்.....

No comments:

Post a Comment