Friday, September 30, 2011

சனி வஜ்ர பஞ்சர கவசம் - தமிழ் அர்த்த உரை

இந்த ஸ்தோத்ரத்தின் முதலாவது போஸ்டிங்க் லிங்க் here. அப்போது நேரமின்மை காரணமாக ஸ்தோத்ரத்தின் தமிழ் அர்த்தத்தை எழுத முடியவில்லை. நம்பரின் முறைப்படி ஸ்தோத்ரத்தை தமிழ் அர்த்தத்துடன் படிக்கவும்.

1.     நீல வண்ண ஆடை உடுத்திய நீல நிறத்தவர், மகுடம் தரித்து வல்லூறு வாகனத்தில் அமர்ந்திருப்பவர். பயத்தால் நடு நடுங்க வைக்கும் வில்லை ஏந்தியவர். நான்கு கரத்தினை உடையவரான சூர்யபுத்திரர் ஆன சனி பகவான் எப்போதும் என் பிரார்த்தனையில் மகிழ்ந்து இருப்பராக. அம்மகிழ்ச்சியில் திளைத்து நான் வேண்டும் வரங்களை அளிப்பராக.

2.     ப்ரஹ்மா கூறுகிறார் :- " ஹே ரிஷிகளே!  கேளுங்கள். இந்த மகத்தான ஸ்தோத்ரம் சனி பகவானால் ஏற்படும் இன்னல்களை நீக்க வல்லது. இச் சனி கவசமானது , மற்ற எல்லா கவசங்களையும் விடவும் மிகவும் மேலானது."

3.     எல்லா தெய்வங்களாலும் அணியப் பெற்ற  இக்கவசமானது வஜ்ராயுத கவசம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கவசமானது சனி பகவானுக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுக்கிறது. ஆகையால் அவர் மகிழ்ந்து  படிப்பவர் அனைவருக்கும்  அளவற்ற பாக்கியத்தை அளிக்கிறார்.

4.     "ஓம்" . என் மரியாதைக்குரியவரும், சூரியனின் செல்லப்பிள்ளையுமான சனி பகவான் என் நெற்றியை காக்கட்டும். தேவி சாயாவின்  புதல்வரான சனி பகவான் என் கண்களை காக்கட்டும். சனியின் இளைய சகோதரனான  யமராஜன் என்னுடைய காதுகளை காக்கட்டும்.

5.    மகத்தான ஒளியைக் கொடுக்கும் சூரியனின் குலத் தோன்றல் எனது மூக்கினை காப்பாற்றட்டும். சூரிய வம்சத்தவரான சனி பகவான் எனது முகத்தைக் காப்பாற்றட்டும். மெல்லிய குரலை உடையரான சனி பகவான் எனது குரலை காப்பாற்றட்டும். சக்தி வாய்ந்த கரங்களை உடையவரான சனி பகவான் எனது கரங்களை காப்பாற்றட்டும்.

6.    சனி பகவான் எனது தோள்களை காக்கட்டும். எனது கைகளை சுபவேளைகளுக்கு ஒளியைக் கொடுப்பவர் காக்கட்டும். எனது மார்பினை யமராஜனின் சகோதரர் காக்கட்டும். எனது வயிற்றை கரு நீல நிறத்தவரான சனி பகவான் காக்கட்டும்.

7.    நவக்கிரகங்களுக்கு அதிபதியான சனி பகவான் தொப்புள் கொடியை காப்பாற்றட்டும். மந்தகதியில் மெதுவாக நடப்பவரான சனி பகவான் எனது இடையை காக்கட்டும். முடிவிற்கு காரணமானவர் எனது தொடைகளை காக்கட்டும். மரணத்திற்கு அதிபதியானவர் எனது கால்களை காக்கட்டும்.

8.    மெதுவாக நடப்பவரான சனி பகவான் எனது பாதங்களைக் காப்பாற்றட்டும். பிப்பலன் எனது கரங்களையும், கால்களையும் காக்கட்டும். சூரியனின் அன்பிற்கு மிகவும் பாத்திரமான சனி பகவான் எனது கரங்களையும், கால்களையும் மற்றும் உள் உறுப்புகளையும் காக்கட்டும்.

9.    தெய்வங்களால் ஆராதிக்கப்பட்ட இந்த சனி வஜ்ர பஞ்சிர கவசத்தை படிப்பவர்களுக்கு எந்த விதமான துர்பாக்கியங்களும் வராது. சூர்யபுத்திரர் மகிழ்ந்து வரமளிப்பார்.

10.    ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் சனி 12, 1, 2 அல்லது 8 ம் வீட்டில் இருந்தாலோ அல்லது சனி ஜாதகர் பிறந்த நட்சத்திரத்திலிருந்து 7 நட்சத்திரத்தில் ஏறி இருந்தாலோ, இந்த கவசத்தை படிப்பதால், சனி பகவானின் இன்னல்களிருந்து விடுபடலாம். மேலும் சனி பகவான் இந்த கவசம் படிப்பதால் மிகவும் மகிழ்ந்து வரமளிப்பதால், நல்ல பலன்களை காண முடியும்.

11.    கோட்சார ரீதியாக சனி பகவான்  சந்திரன் இருக்குமிடத்திலிருந்து 8, 12, 1 மற்றும் 2 வீட்டில் சஞ்சாரம் செய்யும் போது, இந்த கவசத்தை தினமும் படிப்பதால், எந்தவிதமான துன்பமும் அணுகாது. 

12.    இப்படியாக பண்டைய காலத்தில் இயற்றப்பட்ட இந்த தெய்வத்தன்மை பொருந்திய கவசமானது சனி பகவான் பிறந்த ஜாதகத்தில் லக்னத்திலிருந்தோ (அ) கோட்சார ரீதியாகவோ 12, 1 மற்றும் 8 ம் வீட்டில் அமர்ந்திருந்தால் ஏற்படும் தோஷங்களை அழிக்கவல்லது.

 இந்த போஸ்ட் பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். நன்றி.

No comments:

Post a Comment