Thursday, October 1, 2009

காரிய சித்தி மாலை


காரிய சித்தி மாலை


முன்னுரை:
காசிப முனிவர் தம்முன் அருள் செய்ய எழுந்தருளிய பிள்ளையார் மீது எட்டுப் பாடல்கள் பாடினார். அது கண்ட பிள்ளையார்
"அன்பர்களே ! நீங்கள் நம் மீது பாடிய இப்புகழ்ப்பாக்களை எவரேனும் காலை, நண்பகல், மாலை என்னும் மூன்று வேளைகளிலும் எம்மை நினைத்துப் பாடுவார்களாயின் அவர்களுடைய காரியங்கள் யாவும் வெற்றியடையும். எட்டு நாட்கள் பாடினால் மனம் மகிழுமாறு நன்மை அடைவார்கள். சதுர்த்தி விரத நாளில் எட்டு முறை பாடினால் எண் வகைச் சித்திகளும் கை கூடும். இரண்டு மாதங்கள் நாள் தோறும் பத்து முறை பாடினால் பாடியவர்கட்கு அரச வசியம் உண்டாகும். இரண்டு மாதங்கள் நாள் தோறும் இருபத்தொரு முறை பாடுவோர் அரசாங்கம், மக்கள், சுற்றம், பொன், மணி, நெல், வாகனம், அடிமை என்னும் எண்வகை செல்வங்களையும் அடைவர் " என்று கூறி அருள் செய்து மறைந்தார்.


1. பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன் பால் உதிக்குமோ
   எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து சுரக்குமோ
   சந்த மறைஆ கமங்கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
   அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்


2. உலகம் முழுதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருளெவனவ்
   உலகிற் பிறக்கும் விகாரங்கள் உறாத மேலாம் ஒளியாவன்
   உலகம் புரியும் வினைப்பயனை ஊட்டுங்களைகண் எவன் அந்த
   உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்.




3. இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
   தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர் வாழ் பதியும் உறச்செய்யும்
   கடவுள் முதலோர்க் கூறின்றிக் கருமம் எவனால் முடிவுறும் அத்
   தடவு மருப்புக் கணபதி பொன் சரணம் சரணம் அடைகின்றோம்


4. மூர்த்தி யாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
   தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
   ஆர்த்தி நாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
   போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்


5. செய்யும் வினையின் முதல் யாவன் செய்யப்படும் அப் பொருள் யாவன்
   ஐயம் இன்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
   உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப் பொய்யில்    றையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்


6. வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
   வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
   நாத முடிவில் வீற்றிருக்கும் நாதன் எவன் என் குணன் எவன் அப் போத முதலைக்    கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்


7. மண்ணின் ஒர் ஐங் குணமாகி வதிவான் எவன் நீர் இடை நான்காய்
   நண்ணி அமர்வான் எவன் தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
   எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன்வான் இடை ஒன்றாம்
   அண்ணல் எவன் அக் கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்


8. பாச அறிவில் பசு அறிவில் பற்றற் கரிய பரன் யாவன்
   பாச அறிவும் பசு அறிவும் பயிலப் பணிக்கும் அவன் யாவன்
   பாச அறிவும் பசு அறிவும் மாற்றி மேலாம் அறிவான
   நேசன் எவன் அக் கணபதியை திகழச் சரணம் அடைகின்றோம்.










No comments:

Post a Comment