Wednesday, April 5, 2017

Kollur Mookambikai Stuti - கொல்லூர் மூகாம்பிகை துதி

 Courtesy: Google Images
கொல்லூர் மூகாம்பிகை துதி

உலகதன் தாயே ! உண்மை ஒளிப்பரம் பொருளே ! 
உன்றன் மலரடி வணங்கு கின்றேன்.
மரையன் ஈசன் மற்றும் அலகிலாத் தேவர் போற்ற
அவரவர்க் கருள்வாய் ! கொல்லூர்க் குலமகள் திருவே !
உன்றன் குரைகழல் வணங்குகின்றேன்.

உலகினைப் படைப்பான் வேதன் உவந்ததைக் காப்பான் கண்ணன்
நலிவுறத் துடைப்பான் ஈசன் நனியவர்க் காற்றல் ஈவாய் !
மலர்விழிக் கடைநோக் கால்நீ மாதவர் போற்றும் கொல்லூர்க்
குலமகள் திருவே! உன்றன் குரைகழல் வணங்குகின்றேன்.

மாநிலம் முழுவதும் உன்றன் மாயையின் பரவல் அன்றோ ?
ஊனிலும் உயிரிலும் நீ உருவரு வாகி நிற்பாய் !
தேனிலும் இனியாய் ? யாவும் தேவிநின் ஆடல் கொல்லூர்க்
கோனிலத் திருவே ! உன்றன் குரைகழல் வணங்குகின்றேன்.

தேவிநின் பக்தர்க் கெல்லாம் திருவிழிக் கடைநோக் கால்நீ
தேவைகள் பூர்த்தி செய்வாய் ! தீமைகள் யாவும் கொய்வாய் !
ஆவலாய் நாளும் அன்பால் அன்னையே ! திருவே ! கொல்லூர்க்
கோவலன் தேவீ ! உன்றன் குரைகழல் வணங்குகின்றேன்

அறிவிலார் தனக்கும் பேசும் ஆற்றலில் லார்களுக்கும்
முறைமுறை கரலால் மூகாம் பிகையென மொழிவார் உன்னை
நறவமார் கமல வல்லீ ! நானிலம் போற்றும் கொல்லூர்க்
குறைவிலாத் திருவே ! உன்றன் குரைகழல் வணங்குகின்றேன்

ஒரு பாரம் பொருளில் தோன்றி உலகெலாம் படைத்துப் பின்னர்
திருவிளையாடல் செய்தாய் ! தேவியே ! கௌரி என்றும்
பருவநற் குமரி என்றும் பகர்வராம் உனையே ! கொல்லூர்க்
குருமணித் திருவே ! உன்றன் குரைகழல் வணங்குகின்றேன்

மாதவன் ஈசன் மற்றும் வானவர் ஒளியில் தோன்றும்
தீதிலான் மீகச் சின்னம் தேவிநின் அருள்ஸ்ரீ சக்ரம்
மாதவ யோகி கோல மாமுனிக் கருளும் கொல்லூர்க்
கோதிலாத் திருவே ! உன்றன் குரைகழல் வணங்குகின்றேன்

சங்குடன் திகிரி தாங்கும் தாமரைக் கைகளோடு
சங்கடம் தீர வேண்டின் சரணடை என்னும் கையும்
மங்கிட நலமளிக்கும் வரம்தருகையும் கொண்டாய் !
பங்கயா தனத்தாய் ! கொல்லூர்க் பதுமினீ  !  வணங்குகின்றேன்.

தங்கமே அனய மேனித் தயாபரீ ! மகிழ்ச்சி பொங்கும்
மங்கலக் குங்கு மத்தாய் ! மண்ணுயிர் அமைத்தி னுக்கும்
இங்குநீ கதியே ஆவாய் ! இசைவடி வான கொல்லூர்க்
கொங்கலர்த் திருவே ! உன்றன் குரைகழல் வணங்குகின்றேன்

வானவர் போற்றி உன்னை வாழ்த்திய பாடல் போலே
யானுமன் பதனால் இங்கே இசைத்தனன் இந்த நூலை
மாநிலம் தன்னில் நாளும் வாசிப்பார் தாயே ! உன்னால்
வானெனக் கல்வி செல்வம் வளர்ந்திட மகிழ்ந்து வாழ்வார்

No comments:

Post a Comment